எங்கள் தெரு...

எங்கள் தெரு...

வீரவிளைக்காலனி...

கன்னியாக்குமரி மாவட்டத்தில்,      நாகர்கோவில் நகரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், தோவாளை வட்டாரத்தில், பூதப்பாண்டி பஞ்சாயத்திற்குட்பட்ட திட்டுவிளை கிராமத்தில் உள்ள ஒரு தெரு.


மூன்று மதங்களால் சூழப்பட்டு, நல் மனத்தவர்களால் ஆளப்பட்டு, தென்னை மரங்களைத் திண்னையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நைல் நதி.

நீண்டு செல்லும் இந்த நைல் நதியின் இருபக்கம் வீடுகளாலும் நடுபக்கம் சிமெண்ட் சாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட பகுதி. கழிவு நீர்க்கால்வாய்களும் இந்த நதியில் கலப்பதுண்டு. திட்டுவிளை கிராமத்திற்கு இத்தெரு பிரசிதிபெற்றது. சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோரும் எப்பொழுதுமே சுறுசுறுப்பாகக் காணப்படும் இடம்.
ஆற்று நீர் ஆவேசப் பட்டால் கொஞ்சம் ஆத்திரம் தனிய இந்த நதிக்குள் நடனமாடும்.


பாண்டி விளையாட்டு, நொண்டி விளையாட்டு, கள்ளன் போலீஸ் விளையாட்டு, பல்லாங்குழி, கோலி குண்டு(களச்சி), குச்சியாம் பிள்ளை, ஆடு புலி, கபடி, வாலிபால் என அறியா வயதில் மண் தரையில் உழன்று மல்லுக்கட்டின நாட்கள் தான் எத்தனை. 'பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதத்தில் எங்களுக்கு எந்த பூக்கள் வேண்டுமோ வேண்டாமோ இந்த மாதத்தில்' 'மலையிலே தீ எறியுது பிள்ளைகளே ஓடுங்கள் ட்ரைன்,ட்ரைன்,ட்ரைன்' என கையைப்பிடித்துக் கொண்டு சகதிக்குள் சரித்திரம் படைத்த நாட்களை என்னவென்று சொல்வது. இந்த நாட்களை இந்தக் காலனி குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு நெடு நாட்கள் கழித்து எங்கள் கால்தடம் இந்த நைல் நதியில் படும் போது எண்ண அலைகளை எழுப்பிவிடும் போது மனதில் மத்தாப்பு சிரிக்கும். 
 
நாகரீக மாற்றத்திற்கு ஏற்றார்போல் தனது நடையையும் உடையையும் இத்தெரு மாற்றியிருக்கிறது. கிரிக்கெட் விளையாடிய மைதானங்கள் இப்பொழுது வீட்டு மனைகள். தண்ணீருக்காக கண்டங்களைத் தாண்டி செல்லும் பறவையைப் போல விளையாட்டு திடலுக்காக வயல்களையும் தோப்புக்களையும் தேடி செல்லும் வாடிக்கை வழக்கமாகி விட்டது. குறுகிய இடத்தையும் குறைவான நேரத்தையும் எடுக்கும் கேரம் போர்டுக்கு இப்பொழுது முதலிடம்.

இளையத் தலைமுறைக்கு கல்வியில் குறைவில்லை. முந்திய தலைமுறைக்கு உழைப்பில் ஓய்வில்லை.

பண்டிகை காலங்களில் பட்டாசு சத்தம் காதுமடல்களை பதம் பார்க்கும். ஓலிப்பெருக்கிகளின் ஓலம் கேபிள் தொலைக்காட்சிளை ஓரம் கட்டும். ஆட்டம் பாட்டம் என பூமி பந்து புரண்டு அழும்.
தெருவெங்கும் தெம்மாங்கு பாட்டு கேட்கும். வீடெங்கும் சொந்தங்களின் சந்தம் வீதிகளை விழாக்கோலமாக்கும். ஒரு வட்டையில் கஞ்சி காய்த்து பண மட்டையில் கொஞ்சம் ஊற்றி ஊறுகாயுடன் ஊருக்குள் உலவுவதும், திருமண பந்தலில் திருவிளையாடல் நிகழ்த்துவதும் இந்த தெருவுக்கு கைவந்தக் கலை. 


இங்கே நாங்கள்,
புறாக்கூட்டில் ஏறி புதிய பாட்டு படிச்சிருக்கிறோம்.
நிலாக்கூட்டில் ஏறி நித்தம் விளையாடியிருக்கிறோம்.
களத்து மேடுகளில் சண்டை போட்டிருக்கிறோம்.
குளத்தின் கரைகளில் மீன் பிடித்திருக்கிறோம்.
வயல் வாய்க்கால்களில் நண்டு, பாம்புடன் மல்லுக்கட்டிருக்கிறோம்.
அடுத்தவர் வீட்டு திண்னைகளில் ஆரவாரம் செய்திருக்கிறோம்.
அன்பில் அடுத்தரை வென்றிருக்கிறோம்.
 
நாங்கள் பதித்துக் கொண்டிருக்கும் தடம் எங்களுடையது.
தடத்திற்கான இடம் வீரவிளைக்காலனியினுடையது!

ஏறியவர்கள் நாங்கள்.
ஏணிப்படி வீரவிளைக்காலனி!

முதல்வரி எங்களுடையது.
முகவரி வீரவிளைக்காலனியினுடையது.


எனது கனவு பூமி அது. ஆனால் ஆற்று மீன் கடலில் வாழமுடியாதது போல என் கனவு பூமி வாழ்க்கை கானல் நீராய் கரைந்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது சில அனுக்கம் இருந்தாலும் பாலையும் நீரையும் பிரிக்கும் அன்னத்தைப் போல தெளிந்து சுவற்றில் எறிந்த பந்து மீண்டும் திரும்பி வருவது போல என் கனவு பூமிக்குள் என் இல்லை எங்கள் கால்தடஙகள் மீண்டும் பதியும் என்பது திண்ணம்.

Comments

  1. Cool.... naamma ooru rombavae mariduchi... But I prefer the older flavor of our countryside.... Thanks dude

    ReplyDelete
  2. நினைவுகள் அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)